Wednesday, June 17, 2015

வாழ்க்கைப் பக்கம்

எனது வாழ்வில் பணியாற்றிய காலத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை சொல்லிவிட விரும்புகிறேன். பைபிளின் 1 சாமுவேல் 18 முதல்  21 வரை படித்தபோது எனது வாழ்விலும் இதே போன்றதொரு நிகழ்வு நடந்தது நினைவுக்கு வந்தது.

சவுலும் தாவீதும் போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தபோது  பெண்கள் ஆடிப்பாடி வரவேற்றனர். சவுல் கொன்றது ஆயிரம் தாவீது கொன்றதோ பதினாறாயிரம் என்று பாடியதைக் கேட்ட சவுல் தனக்கு கீழ் பணி செய்பவனை தனக்கு மேலாக புகழ்வதை விரும்பவில்லை. தாவீதின் மீது காய்மகாரம் கொண்டான். அந்த நாள் முதல் சவுல் தாவீதை காய்மகாரமாக பார்த்தான்  என சாமுவேல் 1;18-21 கூறுகிறது.

அப்போது நான் அகதிகள் மறுவாழ்வு தனி துணை தாசில்தாராக அந்த மாவட்டத்தில் பனி புரிந்துவந்தேன். பற்பல இடங்களில் வாழ்ந்து வந்த அகதிகளை ஒரே இடத்தில் வாழும்படி செய்வதற்காக ஆலங்குடியில் இருந்த ஒரு முஸ்லீம் செல்வந்தரிடம் அனுமதி பெற்று அவருக்கு சொந்தமான இடத்தில் 5 ஏக்கரை இனாமாக அவரிடமிருந்து பெற்றேன். அதில் ஏறத்தாழ 50 குடிசைகளை அமைத்து அகதிகள் குடிவந்தனர்.

வீடுகளை திறந்து வைக்க அகதிகள் மாவட்ட ஆட்சியரை அழைத்திருந்தனர்.அவரும் வந்து குடிசைகளை திறந்துவைத்துவிட்டு மேடையில் வந்து அமர்ந்தார். அந்த இடத்திலேயே 50 வீடுகளை பஞ்சாயத்து யூனியனில்  இருந்து கட்டித்தர உத்தரவு கொடுகுமாறு கோரிக்கை வைத்தனர். அப்படியே செய்வதாக ஆட்சியர் உறுதிமொழி அளித்தார்.

அப்போது அகதிகள்  நான் தடுத்தும் என்னை கேளாமல் மேடை மீது ஏறி "இவர் எங்கள் தாசில்தார். இந்த இடத்தை இலவசமாக வாங்கித் தந்து எங்களை வாழவைத்தவர்" என்று கூறி எனக்கு மாலை அணிவித்தனர்.  அப்போது ஆட்சியர் என்னைப் பார்த்த பார்வையில் காய்மகார உணர்வை நான் கண்டேன். இதனால் அவரால் எனக்கு பல இடைஞ்சல்கள் ஏற்பட்டன. அவர் மாறுதலாகிச் செல்லும் போது கூட அந்த நிகழ்விலும் நான் கலந்துகொள்ளவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில்  எனது பணிக்கால ஆரம்பத்தில் நான் ஜெயங்கொண்டம்  தாலுகாவில் பணியாற்றிவந்தேன்.  இயற்கையிலேயே தமிழார்வம் கொண்டவன் நான். அண்ணாவின் பேச்சுகளைக் கேட்கத் தவறுவதில்லை. அவரது புத்தகங்களையும் படித்து இருக்கிறேன்.  ஜெயங்கொண்டம் வருவாய்த் துறை சங்க ஆண்டுவிழாவில் புத்தகம் வெளியிடப்பட்டது. அதில் வாழ்க்கை வாழ்வதற்கே  என்ற கட்டுரையை எழுதியிருந்தேன். புரட்சிக் கருத்துக்கள் நிறைந்திருந்தது. பலராலும் பாராட்டப்பட்டது.

இதே சமயத்தில் வேறொரு தாலுக்காவில் நடந்த சங்க ஆண்டுவிழா மலருக்காக கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பியிருந்தேன்.  சங்கத்தின் மூலமாக வராத காரணத்தினால் கட்டுரையை வெளியிடாது அப்படியே திருப்பி அனுப்பிவிட்டனர்.கட்டுரை  கிடைத்ததும் சங்கத் தலைவரும் செயலாளரும் என்னைக் கூப்பிட்டு கண்டித்தனர். இனி இவ்வாறு எல்லாம் எழுதாதே என்று அறிவுரை கூறினார்கள். உனது கட்டுரையைப் படித்தோம். அனல் பறக்கிறது. நீ எழுத்தாளராக ஆகியிருந்தால் மிகப் பிரபலமாகியிருப்பாய். இப்படி தாலுகா ஆபீஸ் குமாஸ்தாவாக இருக்கவேண்டும் என்பது உனது தலைவிதி போலும் என்று கூறினார்கள். அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு அன்றுடன் எனது எழுத்தார்வதிற்கு அணை போட்டுவிட்டேன்.

ஜாதி மத பேதத்தால் வாழ்வில் ஒன்றுபடமுடியாத காதலர்கள் சாவில் ஒன்று படுவதை மையமாக்கி சாவின் அணைப்பு என்ற எனது முதல் கதையை எழுதினேன். கதை திரை முழக்கம் என்ற பத்திரிகையில் வெளியாகியது. அடுத்ததாக  தாசி குலத்தை சேர்ந்த பெண்ணை மணந்ததின் காரணமாக சமுதாயத்தில் ஒருவனுக்கு ஏற்பட்ட இழிவுகளை மையமாக்கி  விஷ கன்னிகை என்ற கதையை எழுதினேன். அதுவும் பிரசுரமாயிற்று.  பின்பு  விபச்சாரிகளின் அலங்கோலத்தை மையமாக்கி வண்டுகளைத் தேடும் மலர்கள் என்ற கதையை எழுதினேன். அதுவும் வெளியானது. பிறகு ஒரு நீதிபதியின் வாழ்வில் நடந்த நிகழ்வை வைத்து நீதிக்கு மரியாதை என்ற கதையை எழுதினேன். அதுவும் பிரசுரமாயிற்று.

.............................தொடரும்..................




1 comment:

  1. திரு விகடர் அவர்களே, தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete