Wednesday, October 21, 2015

எம் ஜி ஆர் ஒரு சகாப்தம் 2.

1941 இல் பாகவதரோடு நடிக்கும் பாக்கியம் எம்ஜிஆருக்கு அசோக் குமார் என்ற படத்தில்  கிடைத்தது. எம்ஜிஆரின் ஆரம்பகாலப் படங்களில் அசோக் குமார் குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து தமிழறியும் பெருமாள், தாசிப் பெண், ஹரிச்சந்திரா, மீரா  ஆகிய படங்களில் நடித்தார். பின்னணி பாடும் முறை இல்லாத காலகட்டம் அது. சொந்தக்குரலில் பாடத்தெரிந்தவர்கள்  மட்டுமே கதாநாயகனாக நடிக்க முடியும் என்ற நிலை. அழகும் திறமையும் உள்ள எம்ஜிஆரால் கதாநாயகனாக உயர முடியாமல் போனதற்கு அதுதான் காரணம். ஏனெனில் எம்ஜிஆருக்குப் பாடத் தெரியாது.
46இல் பின்னணி பாடும் முறை வந்தது.எம்ஜிஆர் வாழ்க்கையிலும் திருப்பு முனை ஏற்பட்டது. 47 இந்தியாவுக்கு மட்டுமல்லாது எம்ஜிஆருக்கும் முக்கியமான ஆண்டாக இருந்தது.47 இல் ஏப்ரல் 11 இல் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த ராஜ குமாரி படம் வெளியானது. (36 இல் அவருக்கு முதல் படம் சதிலீலாவதி. 11 வருடங்கள் கழித்துதான் அவரால் கதாநாயகனாக வர முடிந்தது) திடீரெனெ எப்படி அவருக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது  சுவாரஸ்யமானது.
ஸ்ரீ முருகன் என்ற படத்தில் எம்ஜிஆர் பரமசிவன் வேடத்தில் நடித்தார். அவரும் பார்வதி வேடத்தில் நடித்த மாலதியும் ஆடிய தாண்டவம் ஆட்டம் ரசிகர்களைக் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு ஏ  எஸ் ஏ சாமி வசனம் எழுதினார். இருவரும் நண்பர்களானார்கள். இதை அடுத்து ராஜகுமாரி என்ற படத்தை அதே ஜூபிடர் நிறுவனம் எடுக்க திட்டமிட்டது. இதற்கு சாமி கதை வசனம் மேலும் இயக்குனர் பொறுப்பும் ஏற்றார். படத்திற்கு பி யு சின்னப்பா நாயகனாகவும் டி ஆர் ராஜகுராரி நாயகியாகவும் நடிக்க ஏற்பாடானது. ஆனால் சாமி எம்ஜிஆர் மற்றும் மாலதியை வைத்தே படத்தை எடுக்கலாம் என்று விருப்பம் தெரிவித்தார்.  பெரிய நடிகர்களை வைத்து எடுத்தால் வெற்றி நிச்சயம் இதுபோன்று சிறு நடிகர்கள் நடித்தால் படம் தேறாது என்று சொல்லி முதலில் மறுத்த ஜூபிடர் நிறுவனம்  பின்னர் சாமியின் பிடிவாதத்தைக் கண்டு அவர் போக்கிலேயே விட்டுவிட ராஜகுமாரியில் எம்ஜிஆர் நாயகனானார்.
சாமி  எம்ஜிஆர் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. எம்ஜிஆரும் டி எஸ் பாலையாவும் போடும் கத்திச் சண்டை பிரமாதமாக இருந்தது. இதில் எம்ஜிஆருக்குப் பின்னணி பாடியவர் எம் எம் மாரியப்பா. இதில்தான் நம்பியார் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். படத்தில் எம்ஜிஆர் பெயர் எம்ஜி ராமச்சந்தர் என்று போடப்பட்டது. படம் பெரிய வெற்றி அடைந்தது. மக்கள் மத்தியில் எம்ஜிஆர் பிரபலமானார்.
சிறையில் இருந்து பாகவதர் வெளிவந்தபின் ராஜ முக்தி என்ற படத்தை தயாரித்தார். இதல் வி என் ஜானகி பாகவதரின் ஜோடியாக நடித்தார். பாகவதருக்கு அடுத்த தளபதி வேடத்தில் எம்ஜிஆர் நடித்தார். வில்லி ரோலில் பானுமதி நடித்தார். அவருக்கு முதல் தமிழ் படம் இதுதான். இந்தப் படதின்போதுதான் எம்ஜிஆரும் ஜானகியும் சந்தித்து பேசிக்கொண்டனர்.  எம்ஜிஆரின் முதல் மனைவி பார்கவி போலவே ஜானகி தோற்றமளித்தார். எனவே எம்ஜிஆருக்கு அவர் மீது காதல் உண்டானது. இருவரும் நெருங்கிப் பழகினார்கள். அப்போது எம்ஜிஆரை விட ஜானகி அதிக பிரபலமாக இருந்தார்.
தன் இரண்டாம் மனைவி சதானந்தவதியின் ஒப்புதலுடன் எம்ஜிஆர் ஜானகியை மணந்து கொண்டார். பாகவதர் படங்களுக்கு இசை யமைத்த பாபநாசம் சிவனின் அண்ணன் ராஜகோபால ஐய்யரின் மகள்தான் ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது.

----------தொடரும்------------



2 comments:

  1. நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதவும்.

    ReplyDelete
  2. Great post. super.

    ReplyDelete