Wednesday, October 21, 2015

எம் ஜி ஆர் ஒரு சகாப்தம் 2.

1941 இல் பாகவதரோடு நடிக்கும் பாக்கியம் எம்ஜிஆருக்கு அசோக் குமார் என்ற படத்தில்  கிடைத்தது. எம்ஜிஆரின் ஆரம்பகாலப் படங்களில் அசோக் குமார் குறிப்பிடத்தகுந்தது. தொடர்ந்து தமிழறியும் பெருமாள், தாசிப் பெண், ஹரிச்சந்திரா, மீரா  ஆகிய படங்களில் நடித்தார். பின்னணி பாடும் முறை இல்லாத காலகட்டம் அது. சொந்தக்குரலில் பாடத்தெரிந்தவர்கள்  மட்டுமே கதாநாயகனாக நடிக்க முடியும் என்ற நிலை. அழகும் திறமையும் உள்ள எம்ஜிஆரால் கதாநாயகனாக உயர முடியாமல் போனதற்கு அதுதான் காரணம். ஏனெனில் எம்ஜிஆருக்குப் பாடத் தெரியாது.
46இல் பின்னணி பாடும் முறை வந்தது.எம்ஜிஆர் வாழ்க்கையிலும் திருப்பு முனை ஏற்பட்டது. 47 இந்தியாவுக்கு மட்டுமல்லாது எம்ஜிஆருக்கும் முக்கியமான ஆண்டாக இருந்தது.47 இல் ஏப்ரல் 11 இல் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த ராஜ குமாரி படம் வெளியானது. (36 இல் அவருக்கு முதல் படம் சதிலீலாவதி. 11 வருடங்கள் கழித்துதான் அவரால் கதாநாயகனாக வர முடிந்தது) திடீரெனெ எப்படி அவருக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது  சுவாரஸ்யமானது.
ஸ்ரீ முருகன் என்ற படத்தில் எம்ஜிஆர் பரமசிவன் வேடத்தில் நடித்தார். அவரும் பார்வதி வேடத்தில் நடித்த மாலதியும் ஆடிய தாண்டவம் ஆட்டம் ரசிகர்களைக் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு ஏ  எஸ் ஏ சாமி வசனம் எழுதினார். இருவரும் நண்பர்களானார்கள். இதை அடுத்து ராஜகுமாரி என்ற படத்தை அதே ஜூபிடர் நிறுவனம் எடுக்க திட்டமிட்டது. இதற்கு சாமி கதை வசனம் மேலும் இயக்குனர் பொறுப்பும் ஏற்றார். படத்திற்கு பி யு சின்னப்பா நாயகனாகவும் டி ஆர் ராஜகுராரி நாயகியாகவும் நடிக்க ஏற்பாடானது. ஆனால் சாமி எம்ஜிஆர் மற்றும் மாலதியை வைத்தே படத்தை எடுக்கலாம் என்று விருப்பம் தெரிவித்தார்.  பெரிய நடிகர்களை வைத்து எடுத்தால் வெற்றி நிச்சயம் இதுபோன்று சிறு நடிகர்கள் நடித்தால் படம் தேறாது என்று சொல்லி முதலில் மறுத்த ஜூபிடர் நிறுவனம்  பின்னர் சாமியின் பிடிவாதத்தைக் கண்டு அவர் போக்கிலேயே விட்டுவிட ராஜகுமாரியில் எம்ஜிஆர் நாயகனானார்.
சாமி  எம்ஜிஆர் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. எம்ஜிஆரும் டி எஸ் பாலையாவும் போடும் கத்திச் சண்டை பிரமாதமாக இருந்தது. இதில் எம்ஜிஆருக்குப் பின்னணி பாடியவர் எம் எம் மாரியப்பா. இதில்தான் நம்பியார் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். படத்தில் எம்ஜிஆர் பெயர் எம்ஜி ராமச்சந்தர் என்று போடப்பட்டது. படம் பெரிய வெற்றி அடைந்தது. மக்கள் மத்தியில் எம்ஜிஆர் பிரபலமானார்.
சிறையில் இருந்து பாகவதர் வெளிவந்தபின் ராஜ முக்தி என்ற படத்தை தயாரித்தார். இதல் வி என் ஜானகி பாகவதரின் ஜோடியாக நடித்தார். பாகவதருக்கு அடுத்த தளபதி வேடத்தில் எம்ஜிஆர் நடித்தார். வில்லி ரோலில் பானுமதி நடித்தார். அவருக்கு முதல் தமிழ் படம் இதுதான். இந்தப் படதின்போதுதான் எம்ஜிஆரும் ஜானகியும் சந்தித்து பேசிக்கொண்டனர்.  எம்ஜிஆரின் முதல் மனைவி பார்கவி போலவே ஜானகி தோற்றமளித்தார். எனவே எம்ஜிஆருக்கு அவர் மீது காதல் உண்டானது. இருவரும் நெருங்கிப் பழகினார்கள். அப்போது எம்ஜிஆரை விட ஜானகி அதிக பிரபலமாக இருந்தார்.
தன் இரண்டாம் மனைவி சதானந்தவதியின் ஒப்புதலுடன் எம்ஜிஆர் ஜானகியை மணந்து கொண்டார். பாகவதர் படங்களுக்கு இசை யமைத்த பாபநாசம் சிவனின் அண்ணன் ராஜகோபால ஐய்யரின் மகள்தான் ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது.

----------தொடரும்------------



Thursday, October 15, 2015

எம் ஜி ஆர் ஒரு சகாப்தம் 1.

"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்" என்று அன்று பாடிய திரை உலகிலும் அரசியலிலும் சாதனைகள் புரிந்த எம் ஜி ஆர் என்ற மூன்றேழுத்து மாமனிதரின் வாழ்க்கையின் நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவருவோம். 
தமிழ் உலகின் சூப்பர் ஸ்டாராகவும் தமிழக முதல்வராகவும் திகழ்ந்த எம் ஜி ஆர் திரை உலகில் காலடி எடுத்து வைத்த பின் கதாநாயகன் அந்தஸ்தை எட்டிப்பிடிக்க 11 ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. அவர் முழுப் பெயர் எம் ஜி ராமச்சந்திரன். பெற்றோர் கோபால மேனன் சத்தியபாமா. கோபாலமேனன் அரூர் எர்ணா குளம் திருச்சூர் ஆகிய இடங்களில் மேஜிஸ்ட்ரேட் ஆக பணிபுரிந்து வந்தார். நீதி தவறாத நீதிபதியாக அநீதிக்கு துணை போக மறுத்தார். அவரை வேறு ஊர்களுக்கு அடிக்கடி மாற்றினார்கள். அதனால் மனவேதனை அடைந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மனைவியுடன் இலங்கை சென்றார்.இவர் இலங்கையில் வசித்தபோது கண்டியிலிருந்து  3 கீ மி தூரத்தில் உள்ள ஹந்தானா என்ற இடத்தில் 1917, ஜனவரி 17ம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் எம் ஜி ஆர் பிறந்தார்.  அந்த இடம் தமிழில் பச்சைக் காடு என்று அழைக்கப்படுகிறது. எம் ஜி ஆர்  பிறந்த இடம் தற்போது ஒரு பள்ளிக்கூடமாக இருக்கிறது.
எம் ஜி ஆர்க்கு சக்ரபாணி பாலகிருஷ்ணன் என்ற 2 அண்ணன்கள் கமலாட்சி சுபத்திரா என்ற தமக்கைகள். 4 குழந்தைகளுக்குப் பின்  கடைக் குட்டியாக பிறந்தவர்தான் எம்ஜிஆர்.பாலகிருஷ்ணன் கமலாட்சி, சுபத்திரா மூவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். சக்ரபாணியையும் எம்ஜிஆர் ரையும் அன்புடன் வளர்த்தனர். எம்ஜிஆர் ருக்கு இரண்டரை வயதானபோது குடும்பத்துடன் தாயகம் திரும்பினர். முன்பு செல்வச் செழிப்புடன் வாழ்ந்த குடும்பம் ஒத்தப் பாலம் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்தது.
1920 இல் எம்ஜிஆரின் 3ம் வயதில் கோபாலமேனன் திடீரென்று மாரடைப்பால் காலமானார். இரண்டு மகன்களையும் ஆளாக்கும் பொறுப்பு சத்தியா அம்மையாரின் தலையில் விழுந்தது. அவரது தம்பி நாராயணனும் குடும்ப நண்பர் வேலு நாயரும் கும்பகோணத்தில் வசித்து வந்தனர். குழந்தைகளுடன் அங்கு சென்றார் சத்திய பாமா.
நாராயணன் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்ற நாடக குழுவில் பின் பாட்டுப் பாடிவந்தார்.இலங்கையிலிருந்து கொண்டு வந்த பணம், நகை தீரும்  வரை அன்றாட வாழ்க்கை சிரமமின்றி கழிந்தது. அதன் பின் குழந்தைகளை வளர்க்க அரும்பாடு பட்டார் சத்தியபாமா. குடும்ப கஷ்டத்தை போக்க நாராயணன் ஒரு யோசனை கூறினார். சக்ரபானியும் எம்ஜிஆரும் பார்க்க அழகாக இருப்பதால் தான் வேலை பார்க்கும் நாடகக் கம்பெனியில் சேர்ந்தால் விரைவில் முன்னுக்கு வரலாம் என்று சொன்னார். குடும்ப சூழ்நிலையை உத்தேசித்து சத்தியபாமா இதற்கு சம்மதித்தார்.
அதன் படி இருவரும் கம்பெனியில் சேர்க்கப்பட்டனர். அங்கேதான் பி யு சின்னப்பா, டி எஸ் பாலையா ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். 1935 இல் எஸ் எஸ் வாசன் எழுதிய சதிலீலாவதி என்ற கதை படமாக உருவானது. அதில் ஒரு போலிஸ் வேடத்தில் எம்ஜிஆர் நடித்தார். அப்போது அவருக்கு வயது 19. கிடைத்த சம்பளமோ 100. அதை அப்படியே அம்மாவிடம் கொடுத்து ஆசிபெற்றார். இதுவே அவரது முதல் படம். இரண்டாவது படம் இரு சகோதரர்கள். இதில் சக்ரபானியும் நடித்தார். படம் நன்றாக ஓடியது.
தொடர்ந்து சிறு வேடங்களில் நடித்துவந்த எம்ஜிஆர்க்கு திருமணம் செய்ய சத்தியபாமா விரும்பினார். நடிப்புத் துறையில் முன்னேறிய பிறகே திருமணம் என்று எம்ஜிஆர் மறுத்தாலும் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற அதற்கு சம்மதித்தார். பாலக்காட்டைச் சேர்ந்த பார்கவி என்ற தங்கமணியை திருமணம் செய்தார். துரதிஷ்ட வசமாக பார்கவி சில ஆண்டுகளிலேயே மரணித்தார். மனைவியின் மரணம் எம்ஜிஆரை மிகவும் பாதித்தது. ஒரு துறவி போல வாழ்ந்தார். மகனின் நிலை கண்டு வருந்திய தாய் அவருக்கு மறுமணம் செய்ய விரும்பி மறுமணத்தின் கட்டாயத்தை எடுத்துரைத்து எம்ஜிஆரை சம்மதிக்க வைத்தார். அப்படி இரண்டாம் மனைவியாக வந்தர்வர்தான் சதானந்தவதி. அவர் கர்ப்பம் ஆனபோது அவருக்கு காசநோய் பிடித்தது. அப்படியே விட்டால் உயிருக்கு ஆபத்து என்று அவருடைய கர்ப்பப்பையை அகற்றினார்கள் மருத்துவர்கள்.  47 இல் எம்ஜிஆரின் தாய் காலமானார். அந்தத் துயரத்திலிருந்து எம்ஜிஆர் மீள வெகு காலம் பிடித்தது.
49 ஆம் ஆண்டில் உடல் நலம் குன்றிய சதானந்தவதி  படுத்த படுக்கையானார். அவர் இறக்கும் வரை மாத்திரை களுடனே ஒரு நோயாளியாகவே வாழ்ந்தார். அவரை எம்ஜிஆர் கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார். இருந்தும் அவர் ஒரு இல்லற துறவியாகவே வாழ்ந்துவந்தார்.
சோதனைகள் பல இருந்தாலும் திரைத் துறையில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வந்தார்.

......தொடரும்...


Wednesday, June 17, 2015

திகில் கதை

இது முழுதும் கற்பனையே. எனது கனவில் கண்ட காட்சி இது.

அந்த போலிஸ் ஸ்டேஷனுக்கு அன்றுதான் மாறுதலாகி பணியில் சேர்ந்திருந்தார் ஆய்வாளர் அமரன். இரவு உதவி ஆய்வாளருடன் ரோந்து சுற்றி வரும்போது ஒரு பஸ் மிக வேகமாக தன்னைத் தாண்டிப் போவதைக் கண்டு விசில் ஊதினார். பஸ் நிற்கவில்லை. உடனே இவர் ஓடிச் சென்று அந்த பஸ்ஸைப் பிடித்து அதில் தவி ஏறினார். என்ன விந்தை!பஸ் சில் ஒருவரும் இல்லை. காலியாக இருந்தது. ஆனாலும் பேச்சுக் குரல்கள் கேட்டன. ஒரு மனிதன் ஏறிவிட்டான் கீழே தள்ளுங்கள் என்ற குரல் ஒலித்தது. இவர் உடனே கீழே தள்ளப்பட்டார்.

கீழே விழுந்தவரை உதவி ஆய்வாளர் எழுப்பி நிற்க வைத்தார். அந்த பஸ் அருகிலிருந்த ஒரு மலையின் மீது ஏறி விழுந்தது. மனிதர்களின் மரண ஓலக் குரல்கள் கேட்டன. பின்பு அமைதியானது. அமரனுக்கு ஒன்றும் புரியவில்லை. இது பற்றி உதவி ஆய்வாளரிடம் விளக்கம் கேட்டபோதுதான் இம்மாதிரி நிகழ்வு சென்ற இரண்டு ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் அந்த பஸ் சில் இருந்தது மனிதர்கள் அல்ல என்றும் விபத்து ஒன்றில் மாண்டுபோனவர்களின் ஆவிகள் என்றும் தெரிந்தது.

அமரன் இதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கினார். இதற்கொரு முடிவு கட்டவேண்டும் என்று முடிவு செய்தார்.

மறுநாள் பஸ் உரிமையாளருடன் சென்று பள்ளத்தில் கிடந்த பஸ் சை தூக்கி மேலே கொண்டு வந்தார். அதிக சேதம் இல்லையென்றாலும் 5000 வரை செலவு  செய்து பஸ் சை பழைய நிலைக்கு கொண்டு வந்தார்.  பஸ் சின் எண் எம் டி ஒய் 8888 என்பது. இந்த நம்பர் பிளேட்டை என்னுடைய ஜீப்பில் மாற்றுங்கள். என் ஜீப்பின் நம்பரை (எம் டி ஒய் 4000) உங்கள் பஸ் ஸில் மாட்டுங்கள் என்றார் அமரன். அப்படியே செய்யப்பட்டது.

அடுத்த ஆண்டு அந்த நாள் வந்தது. பஸ் திருடப்படவில்லை. பல பேச்சுக் குரல்கள் கேட்டன. என் பஸ் வரவில்லை? என ஆவிகள் எல்லாம் அலைந்தன. 12 மணி அடித்ததும் ஆவிகள் அனைத்தும் ஓலமிட்டபடியே  மலையில் ஏறி கீழே விழுந்தன. காற்றோடு கரைந்து மறைந்தன. அமரன் தனது சாதுர்யத்தால் இதை செய்தார்.

என் சிற்பி

 எனது வாழ்க்கைப் பக்கத்தின் தொடர்ச்சி....

இந்த சந்தர்ப்பத்தில் எனக்கு மேலதிகாரியாக இருந்து எனக்கு நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுத்து ஆங்கிலத்தில் அறிக்கைகள் எழுதும் திறமையையும் வளர்த்த ஒரு நல்லவரைப் பற்றி எழுதுவது எனது கடமை என்று எண்ணுகிறேன். அவரைப் பற்றி எழுதாவிட்டால் நான் நன்றி மறந்தவனாவேன். 

அவர் பெயர் ஆர். பசுபதி.அரியலூரில் ரெவென்யூ டிவிஷனல் அதிகாரியாக (ஆர் டி ஒ) பணியாற்றியவர். அவரது அலுவலகத்தில் பணிபுரியும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.

நான் எப்போதும் தலை நிமிர்ந்தே நடப்பேன். வேகமாக நடப்பேன். அடிக்க வருவதுபோல வருகிறாயே என்று நண்பர்கள் கூறுவர். கல்லூரியிலிருந்து வேலைக்குச் சென்றதால் அதிகாரிகளிடம் நடந்துகொள்ளும் விதம் தெரியாது. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது குட் மார்னிங் சொல்லும்படி அறிவுறுத்துவார் பசுபதி.அதிகாரிகளிடம் பேசும்போது நீ அல்லது நீங்கள் என்று சொல்லக்கூடாது என்பார். உதாரணமாக என்னுடன் பேசும்போது ஆர் டி ஒ அப்படி கூறினீர்கள், அதைச் செய்யச் சொன்னீர்கள் என்று கூற வேண்டும். என்ன அவசரமாக இருந்தாலும் நான் மேடையில் அமர்ந்து கோர்ட் நடக்கும்போது குறுக்கே வருவது பைல்களை மேஜையில் வைப்பது கூடாது.  அது கோர்ட்டை அவமதிக்கும் குற்றமாகக் கருதப்படும். கோர்ட்டை முடித்துவிட்டு எனது ஓய்வரைக்குச் சென்ற பின்னரே அங்கு வந்து என்னைப் பார்க்கலாம்.பேசலாம் பைல்களில் ஒப்பம் பெறலாம். இதையெல்லாம் கேட்ட பின்னர்தான் நான் மேலதிகாரிகளுடன் மரியாதையுடன் நடந்துகொள்ளும்  விஷயத்தை அறிந்து கொண்டேன். அதன்படி நடந்தேன்.

அவர்  நன்றாக டென்னிஸ் ஆடுவார். அலுவலகத்தில் உள்ள டென்னிஸ் கோர்ட்டில் சக அதிகாரிகளுடன் விளையாடுவதைப்  பல முறை கண்டிருக்கிறேன்.வீட்டுக்குப் போகும்போது என்னை வீட்டுக்கு வரச் சொல்லுவார். அதே நேரம் தன் வீட்டுக்குச் செல்ல அரசு வாகனத்தை பயன்படுத்தமாட்டார். தனது சைக்கிளிலேயே செல்லுவார். நான் வேகமாக நடப்பதால் அவர் சைக்கிளை  விட்டு இறங்கி முகம் அலம்பும் சமயம் அவர் வீட்டிற்குச் சென்று அமர்ந்துவிடுவேன். சீக்கிரம் வந்திட்டீங்க என்று கூறி வெளியே ஏதாவது சைக்கிள் இருக்கிறதா என்று கேட்பார். நடந்தே வந்துவிட்டேன். எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது என்பேன். இன்றுவரை நான் சைக்கிள் ஒட்டியதே இல்லை. ஒட்டவும் தெரியாது.

அன்றைய பைல்களில்  ஒன்றில் ஆங்கிலத்தில் அறிக்கைகள் எழுதுவார். மற்றொரு பைலை என்னிடம் கொடுத்து இதைப் படித்து  ஆங்கிலத்தில் அறிக்கையை எழுதும்படி கூறுவார். எழுதியவுடன் அதை வாங்கிப் படித்து திருத்தங்கள் செய்து மீண்டும் புதியதாக எழுதச் செய்து ஒப்பமிடுவார். பிறகு இன்றைக்கு இது போதும் நாளைக் காலை 7 மணிக்கு வாருங்கள் மற்ற பைல்களிலும் அறிக்கை எழுதலாம் எனக்கூறி அனுப்பிவிடுவார்.

அப்போது எனக்கு திருமணமாகவில்லை. எனவே நண்பர்களுடன் தங்கியிருந்த ரூமிற்கு சென்று விடுவேன். காலையில் 7 மணிக்கு  வீட்டுக்குச் சென்று மேஜையில் இருக்கும் பைல்களில் அறிக்கை எழுதி அவரின் ஒப்புதலைப் பெறுவேன். பரவாயில்லையே. நான்  திருத்த வேண்டிய அவசியமே இல்லாமல் முழுமையாக எழுதி இருக்கிறீர்களே என்பார். எனக்கு காபி கொடுக்கும்படி கூறிவிட்டு குளிக்கச் சென்று, குளித்துவிட்டு நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு வந்து அமர்வார். குனிந்து கொண்டே இருப்பவர், திடீரென 'நாராயணசாமி ஐயங்கார் வருகிறார்' என்பார்.

அரியலூரில் தாசில்தாரின் மேனேஜராக பணிபுரிந்தவர்தான் நாராயணசாமி ஐயங்கார்.  அவர் வந்ததும்  என்னிடம் இந்த ரிப்போட்டுகள்  எல்லாம் இன்றே பைல் செய்யப்பட்டு கலக்டருக்கு அனுப்பப்பட வேண்டும் என்று கூறி என்னை அனுப்பிவிடுவார்.

அலுவலகம் வந்ததும் தலைமை எழுத்தர் பார்த்துவிட்டு அந்தந்த செக்ஷனுக்கு பைல்களை அனுப்புவார். எனக்கு பைல் வந்ததும் டைபிஸ்ட்டிடம் கொடுத்து டைப் செய்து fair copy for signature என்று எழுதப்பட்ட பேடில் வைத்துவிடுவேன். கையெழுத்தாகி வந்ததும் அன்றைய தபாலிலேயே அறிக்கைகளை கலெக்டருக்கு அனுப்பிவிடுவேன்.

அப்போது ஆர் டி ஓ ஆபீசில் தலைமை எழுத்தராக இருந்தவர் கே வி ராமச்சந்திர ஐயர். உச்சிக் குடுமி வைத்திருப்பார். அவருக்கு நாங்கள் வைத்த பெயர் கழுதை வால் ராமச்சந்திர ஐயர் என்பது. அரசல் புரசலாக அவர் இதைக் கேள்விப்பட்டிருந்தாலும் எங்களை ஒன்றும் செய்வதில்லை. ஆர் டி ஒ எங்களுக்கு வேண்டியவர் என்பது அவருக்குத் தெரியும்.

அலுவலகத்தில் 2வது கிளார்க்காக இருந்தவர் சுகவனம் என்பவர்.மிக நல்லவர், அனைவரிடமும் அன்பாக பழகுவார்,பேசுவார், தெரியாததைக் கேட்டால் சொல்லித்தருவார். அப்போது நான் ரெவின்யூ டெஸ்ட் 1,2,3 பாஸ் செய்திருந்தேன். சர்வே டிரைனிங் போது என் பெயர் சேர்க்கப்பட்டு கலெக்டரிடம் இருந்து உத்தரவு வந்திருந்தது. அதில் என் பெயரை அடிக்கோடிட்டு congratulation என்று எழுதி அனுப்பினார். உடனே டிரைனிங்கில் சேர பணியிலிருந்து என்னை விடுவித்தார். இன்று ஆங்கிலத்தில் நன்றாக என்னால் எழுத முடிகிறது என்றால் அது பசுபதி அவர்களிடம் நான் கற்ற பாடமே காரணம். அந்த நல்லவர் வல்லவரிடம் பணியாற்றும் பேறு கிடைத்ததை பெருமையாக எண்ணுகிறேன்.

வாழ்க்கைப் பக்கம்

எனது வாழ்வில் பணியாற்றிய காலத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை சொல்லிவிட விரும்புகிறேன். பைபிளின் 1 சாமுவேல் 18 முதல்  21 வரை படித்தபோது எனது வாழ்விலும் இதே போன்றதொரு நிகழ்வு நடந்தது நினைவுக்கு வந்தது.

சவுலும் தாவீதும் போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தபோது  பெண்கள் ஆடிப்பாடி வரவேற்றனர். சவுல் கொன்றது ஆயிரம் தாவீது கொன்றதோ பதினாறாயிரம் என்று பாடியதைக் கேட்ட சவுல் தனக்கு கீழ் பணி செய்பவனை தனக்கு மேலாக புகழ்வதை விரும்பவில்லை. தாவீதின் மீது காய்மகாரம் கொண்டான். அந்த நாள் முதல் சவுல் தாவீதை காய்மகாரமாக பார்த்தான்  என சாமுவேல் 1;18-21 கூறுகிறது.

அப்போது நான் அகதிகள் மறுவாழ்வு தனி துணை தாசில்தாராக அந்த மாவட்டத்தில் பனி புரிந்துவந்தேன். பற்பல இடங்களில் வாழ்ந்து வந்த அகதிகளை ஒரே இடத்தில் வாழும்படி செய்வதற்காக ஆலங்குடியில் இருந்த ஒரு முஸ்லீம் செல்வந்தரிடம் அனுமதி பெற்று அவருக்கு சொந்தமான இடத்தில் 5 ஏக்கரை இனாமாக அவரிடமிருந்து பெற்றேன். அதில் ஏறத்தாழ 50 குடிசைகளை அமைத்து அகதிகள் குடிவந்தனர்.

வீடுகளை திறந்து வைக்க அகதிகள் மாவட்ட ஆட்சியரை அழைத்திருந்தனர்.அவரும் வந்து குடிசைகளை திறந்துவைத்துவிட்டு மேடையில் வந்து அமர்ந்தார். அந்த இடத்திலேயே 50 வீடுகளை பஞ்சாயத்து யூனியனில்  இருந்து கட்டித்தர உத்தரவு கொடுகுமாறு கோரிக்கை வைத்தனர். அப்படியே செய்வதாக ஆட்சியர் உறுதிமொழி அளித்தார்.

அப்போது அகதிகள்  நான் தடுத்தும் என்னை கேளாமல் மேடை மீது ஏறி "இவர் எங்கள் தாசில்தார். இந்த இடத்தை இலவசமாக வாங்கித் தந்து எங்களை வாழவைத்தவர்" என்று கூறி எனக்கு மாலை அணிவித்தனர்.  அப்போது ஆட்சியர் என்னைப் பார்த்த பார்வையில் காய்மகார உணர்வை நான் கண்டேன். இதனால் அவரால் எனக்கு பல இடைஞ்சல்கள் ஏற்பட்டன. அவர் மாறுதலாகிச் செல்லும் போது கூட அந்த நிகழ்விலும் நான் கலந்துகொள்ளவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில்  எனது பணிக்கால ஆரம்பத்தில் நான் ஜெயங்கொண்டம்  தாலுகாவில் பணியாற்றிவந்தேன்.  இயற்கையிலேயே தமிழார்வம் கொண்டவன் நான். அண்ணாவின் பேச்சுகளைக் கேட்கத் தவறுவதில்லை. அவரது புத்தகங்களையும் படித்து இருக்கிறேன்.  ஜெயங்கொண்டம் வருவாய்த் துறை சங்க ஆண்டுவிழாவில் புத்தகம் வெளியிடப்பட்டது. அதில் வாழ்க்கை வாழ்வதற்கே  என்ற கட்டுரையை எழுதியிருந்தேன். புரட்சிக் கருத்துக்கள் நிறைந்திருந்தது. பலராலும் பாராட்டப்பட்டது.

இதே சமயத்தில் வேறொரு தாலுக்காவில் நடந்த சங்க ஆண்டுவிழா மலருக்காக கட்டுரை ஒன்றை எழுதி அனுப்பியிருந்தேன்.  சங்கத்தின் மூலமாக வராத காரணத்தினால் கட்டுரையை வெளியிடாது அப்படியே திருப்பி அனுப்பிவிட்டனர்.கட்டுரை  கிடைத்ததும் சங்கத் தலைவரும் செயலாளரும் என்னைக் கூப்பிட்டு கண்டித்தனர். இனி இவ்வாறு எல்லாம் எழுதாதே என்று அறிவுரை கூறினார்கள். உனது கட்டுரையைப் படித்தோம். அனல் பறக்கிறது. நீ எழுத்தாளராக ஆகியிருந்தால் மிகப் பிரபலமாகியிருப்பாய். இப்படி தாலுகா ஆபீஸ் குமாஸ்தாவாக இருக்கவேண்டும் என்பது உனது தலைவிதி போலும் என்று கூறினார்கள். அவர்களுக்கு நன்றி கூறிவிட்டு அன்றுடன் எனது எழுத்தார்வதிற்கு அணை போட்டுவிட்டேன்.

ஜாதி மத பேதத்தால் வாழ்வில் ஒன்றுபடமுடியாத காதலர்கள் சாவில் ஒன்று படுவதை மையமாக்கி சாவின் அணைப்பு என்ற எனது முதல் கதையை எழுதினேன். கதை திரை முழக்கம் என்ற பத்திரிகையில் வெளியாகியது. அடுத்ததாக  தாசி குலத்தை சேர்ந்த பெண்ணை மணந்ததின் காரணமாக சமுதாயத்தில் ஒருவனுக்கு ஏற்பட்ட இழிவுகளை மையமாக்கி  விஷ கன்னிகை என்ற கதையை எழுதினேன். அதுவும் பிரசுரமாயிற்று.  பின்பு  விபச்சாரிகளின் அலங்கோலத்தை மையமாக்கி வண்டுகளைத் தேடும் மலர்கள் என்ற கதையை எழுதினேன். அதுவும் வெளியானது. பிறகு ஒரு நீதிபதியின் வாழ்வில் நடந்த நிகழ்வை வைத்து நீதிக்கு மரியாதை என்ற கதையை எழுதினேன். அதுவும் பிரசுரமாயிற்று.

.............................தொடரும்..................




Sunday, June 14, 2015

டி ஆர் ராஜகுமாரி -தமிழ்த் திரையின் முதல் கனவுக் கன்னி

பாதச் சுவடுகளில் புகு முன் இறைவணக்கம்.
1.உன் நிழலில் நான் வாழ்வதற்கு ஆசை கொண்டேன் இறைவா, என் நிழலில் உன்னைக் காண்பதற்கு நாளும் உன்னைத் தேடுகின்றேன்.
2.மின்னும் வின்மீன்கள் கத்தும் கடலலைகள்
வீசிடும் தென்றல் பேசிடும் பறவைகள்
மண்ணும் மாமலைகள் வான்முட்டும் நெடு மரங்கள்
காசினியில் உன் நிழலென இவைகளில் தேடியும் காண்கிலேன்.
3.உன் நிழலில் என் நிழல் மறைந்திருக்கின்றதென்ற
உன் குரலைக் கேட்டபின் உண்மை உணர்ந்தேன்.
என் நிழலில் உன் நிழலைக் கண்டுகொண்டேன் இறைவா
உன் நிழலில்  என்றும் நான் இனி வாழ்ந்திடுவேன்.

இனி பதிவு.


டி ஆர் ராஜகுமாரி.

தமிழ்த் திரைப் பட உலகின் முதல் கனவுக்கன்னி நேரு பெயர் பெற்ற கருப்பழகி டி ஆர் ராஜகுமாரிஉயின் வாழ்கையின் நிகழ்வுகளை எழுத முயல்கின்றேன்.

தஞ்சையில் ஒரு கலை குடும்பத்தில் 1922இல் பிறந்தார். பெயர் ராஜாயி என்பது. ராஜகுமாரியின் அத்தை எஸ் பி எல் தனலெட்சுமி சினிமாவில் நடித்து வந்தார். 46இல் நாதஸ்வர சக்கரவர்த்தி டி என் ராஜரத்தினம் பிள்ளை நடித்த காளமேகம் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க தனலட்சுமி ஒப்பந்தமானார். அவர் சென்னைக்கு படப்பிடிப்புக்குச் செல்லும் போது ராஜாகுமாரியும் உடன் சென்றார்.

சென்னையில் தங்கியிருந்த தனலட்சுமியை ஒரு படத்திற்கு ஒப்பந்தம் செய்வதற்கு டைரக்டர் கே சுப்ரமணியம் வந்திருந்தார்.எம் கே தியாகராஜ பாகவதரையும் எம் எஸ் சுப்புலட்சுமியையும்  திரை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான்,

தனலட்சுமியிடம் சுப்ரமணியம் பேசிக்கொண்டிருந்த பொழுது ஒரு பெண் காபி கொண்டுவந்து கொடுத்தாள். கருப்பு நிறம். வேலைக்காரியோ என எண்ணும் உருவம். யார் இந்தப் பெண் என்று விசாரித்தார். என் சொந்தக்காரப் பெண் உதவிக்கு வந்திருக்கிறாள் என்றார் தனலட்சுமி.

நாளைக்கு இவளை ஸ்டூடியோவுக்கு அழைத்துவாருங்கள். மேக் அப் டெஸ்ட் போட்டுப் பார்ப்போம் என்று சொல்லி விட்டுச் சென்றார்.

மறுநாள் ராஜகுமாரி ஸ்டூடியோவுக்குச் சென்றார். அக்காலத்தில் புகழ் பெற்ற மேக் அப் மேன் ஹரி பாபு வுக்கு போன் செய்து ஒரு பெண்ணை அனுப்புகிறேன் மேக் அப் போட்டு அனுப்புங்கள் என்றார்.

மேக்கப் போடுவதற்கு காத்திருந்த ஹரிபாபு கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த பெண்ணைப் பார்த்து மிரண்டு போனார். யாரம்மா நீ என்று விசாரித்தார். என் பெயர் ராஜாயி மேக்கப் டெஸ்டுக்காக டைரக்டர் சுப்ரமணியம் சார் அனுப்பினார் என்ற பதிலைக் கேட்டதும் ஹரிபாபுவுக்கு மயக்கமே வரும் போலிருந்தது. நிறமோ கருப்பு, பெயரோ ராஜாயி இவளுக்கா மேக்கப் டெஸ்ட் சுப்ரமணியத்துக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். மூச்சு வாங்கியபடி சுப்ரமணியத்தின் அறைக்குள் நுழைந்தார். நிஜமாகவே இந்தப் பெண்ணுக்கு மேக்கப் போடச் சொல்லுகிறீர்களா எனக் கேட்டார்.

அந்தப் பெண் கருப்பாக இருந்தாலும் கேமரா கோணங்களுக்கு பொருத்தமாக இருப்பாள்.சீக்கிரம் போய் மேக்கப் போட்டு அனுப்புங்கள் என்றார் சுப்ரமணியம். திரும்பி வந்த ஹரிபாபு அரை மனதுடன் ராஜாயிக்கு மேக்கப் போட்டு அனுப்பினார்.

ராஜகுமாரியை பல்வேறு போஸ் களில் படம் எடுத்தார். படங்கள் பிரிண்ட் போட்டு வந்ததும் சுப்ரமணியத்துக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. எதிர்பார்த்தற்கு மேலாகவே அழகாக தோன்றினார் ராஜாகுமாரி. என் படத்தில் நீ நடிக்கிறாய் என்றார். அதைக் கேட்டு மகிழ்ந்தார் ராஜகுமாரி. எதோ தோழி வேடம் கிடைக்கப் போகிறது என்று நினைத்தார். நான் கச்ச தேவயாணி என்ற படம் தயாரிக்கிறேன். அதில் நீதான் கதாநாயகி என்றதும் தான் காண்பதெல்லாம் கனவா அல்லது நனவா என்ற சந்தேகம் ஏற்பட்டது ராஜாகுமாரிக்கு. தன் கண் எதிரே இருந்த புகைப்படங்களைப் பார்த்தார். தன் தோற்றம் அடியோடு மாறி கவர்சிக் கன்னியாக தோன்றுவதைக் கண்டார். உடனே அவர் சுப்ரமணியத்தின் காலில் விழுந்து வணங்கினார். இனி உனக்கு நல்ல காலம்தான். விரைவில் பிரபல நடையாக நீ வருவாய் என்று அவர் வாழ்த்தினார்.  அவர்தான் ராஜாயி என்ற பெயரை ராஜாகுமாரி என்று மாற்றினார்.

ராஜாகுமாரியின் முதல் படமான கச்ச தேவயாணி 41இல் வெளிவந்தது. முதல் 3 நாட்களில் தியேட்டர்களில் கூட்டமே இல்லை. படம் பார்த்தவர்கள் நன்றாக இருக்கிறது. கச்ச தேவயானியாக கச்சைக் கட்டிக்கொண்டு புது நடிகை ராஜாகுமாரி நடிக்கிறார். ஆஹா என்ன அழகு என்று கூற, தியேட்டர்களில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தது. பிறகு தினமும் ஹவுஸ்புல் தான். தமிழகம் முழுவதும் 25வாரம் ஓடியது. படத்தின் நாயகன் கொத்தமங்கலம் சீனு.

41இல் சூர்யபுத்திரி என்ற படத்தில் ராஜாகுமாரி நடித்தார். இயக்கியவர் பல உன்னதமான படங்களை இயக்கிய அமெரிக்க டைரக்டர் எல்லிஸ் ஆர் டங்கன். படம் சுமாராக ஓடியது.

ஆனால் அடுத்த ஆண்டில் பி யு சின்னப்பாவுடன் ஜோடியாக நடித்த மாடர்ன் தியேட்டர்ஸின் மனோன்மணி சூப்பர் ஹிட் ஆனது. சின்னாப்பா- ராஜாகுமாரி ஜோடிப் பொருத்தம் பிரமாதம் என்று ரசிகர்கள் எண்ணினார்கள். எனவே மீண்டும் அவர்கள் குபேர குலசாவில் நடித்தார்கள். இதில் சின்னப்பா பாடிய நடையலங்காரம் கண்டேன் என்ற பாடல் பிரபலமானது.

43 இல் சிவகவி என்ற மகத்தான வெற்றிப் படத்தில் பாகவதருடன் முதல் முதலாக  நடித்தார் ராஜகுமாரி. ஜோடியாக இல்லாவிட்டாலும் அதற்கு இணையான ராஜநர்த்தகியாக நடித்தார். கலைகளில் சிறந்தது நாட்டியக் கலையே என்று பாகவதர் பாட, ராஜகுமாரி ஆட, ரசிகர்கள் கிறுகிறுத்துப்போனர்கள்.

44 இல் வெளிவந்து தமிழ்ப் பட உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஹரிதாஸ் படத்தில் பிரபல பாடகி என் சி வசந்தகோகிலம் பாகவதரின் ஜோடியாக நடிக்க , பாகவதரை மயக்கும் தாசி ரம்பாவாக ராஜகுமாரி நடித்தார். மூன்று தீபாவளிகளைத் தாண்டி ஓடி சாதனை நிகழ்த்தியது இந்தப் படம்.  மன்மதலீலையை வென்றார் உண்டோ? என்ற பாடலை பாகவதர் பாடிட ராஜகுமாரி ஆடிய நடனம் பல லட்சம் ரசிகர்களை ராஜகுமாரிக்கு தேடித் தந்தது. காலத்தை வென்ற இப்பாடலை எழுதி இசையமைத்தவர் பாப நாசம் சிவன் என்பது குறிப்பிடத் தக்கது. பிறகு சின்னப்பாவுடன் பங்கஜவல்லி படத்தில் நடித்தார்.

48இல் ராஜகுமாரியின் வாழ்க்கையில் மட்டுமல்ல  தமிழ் திரைப் பட வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க ஆண்டாகும்.  ஜெமினி வாசன் தயாரித்த மிகப் பிரமானடமான சந்திரலேகா என்ற படத்தில் ராஜகுமாரி நடித்தார். அந்தக் காலத்திலேயே 30 லட்சம் செலவில் இந்தப் படத்தை வாசன் தயாரித்திருந்தார். ராஜகுமாரியின் முழுத் திறமையையும்  வெளிப்படுத்திய படம் இது.சர்க்கஸ் காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்தார். பிரமாண்டமான முரசு நடனத்தில் மின்னல் வேகத்தில் நடனமாடி ரசிகர்களை அசத்தினார்.

சந்திரலேகாவை மொழி மாற்றம் செய்து ஹிந்தியில் திரையிட்டார். தமிழை விட ஹிந்தியில் அதிகம் வசூலானது. சந்திரா என்ற பெயரில் ஆங்கில வர்ணனைகளுடன் அமெரிக்காவில் இதை வெளியிட்டார் வாசன். இப்படத்திற்கென பிரமாண்டமான பேனர்களை பம்பாயில் நிறுத்தி வடஇந்திய திரைப்பட உலகை உலுக்கினார்.

தமிழ் நாட்டின் 5 சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்த ஒரே  நடிகை என்ற பெருமை பெற்றவர் ராஜாகுமாரி. பாகவதர், சின்னப்பாவை தொடர்ந்து 3வது சூப்பர் ஸ்டார் ஆனவர் டி ஆர் மகாலிங்கம்.  ஸ்ரீ வள்ளி, நாம் இருவர், ஞான சவுந்தரி மூலம் இந்த அந்தஸ்தை அவர் அடைந்தார். இதய கீதம் என்ற படத்தில் ராஜகுமாரியுடன் ஜோடியாக நடித்தார் மகாலிங்கம். படம் சுமாராகவே ஓடியது. மகாலிங்கத்தை விட ராஜகுமாரி வயதில் பெரியவர் என்பதால் இந்த ஜோடிப் பொருத்தம் பொருந்தவில்லை. 50இல் கே ஆர் ராமசாமியுடன் விஜயகுமாரி, 51இல் சின்னப்பாவுடன் வனசுந்தரி என்ற படத்திலும் நடித்தார் ராஜகுமாரி.

பாகவதர் சிறையிலிருந்து விடுதலை அடைந்து வந்ததும் 52இல் அமரகவி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். விடுதலைக்குப் பின் பாகவதர் நடித்த 5 படங்களில் இதுவே நன்றாக ஓடியது.

சென்னை டி நகரில் தன் பெயரில் ஒரு தியேட்டர் கட்டினார் ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாக முதன் முதலில் தியேட்டர் கட்டியவர் இவர்தான். இதை வாசன் திறந்து வைத்தார்.

தம்பி ராமன்னாவுடன் சேர்ந்து ஆர் ஆர் பிக்சர்ஸ் என்ற படக் கம்பனியை தொடங்கினார். முதல் படம் வாழப் பிறந்தவள். இதில் அவரே நடித்தார். படம் சுமாராக ஓடியது. 54இல் எம் ஜி ஆர்- சிவாஜி இருவரும் இணைந்து நடித்த கூண்டுக்கிளி படத்தை தயாரித்தார். இதில் தனக்கு பொருத்தமான வேடம் இல்லாததால் பி எஸ் சரோஜா, குசல குமாரி இருவரையும் நடிக்க வைத்தார். இரு மாபெரும் நடிகர்கள் நடித்தும் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

இதனால் அவர் துவண்டுவிடவில்லை. குலேபகாவலி என்ற மசாலா படத்தை எடுத்தார். எம் ஜி ஆரை கதானாயனாக்கி அவருக்கு ஜோடியாக நடித்தார். படம் மாபெரும் வெற்றி பெற்று பெரிய வசூலைக் கொடுத்தது.

பாகவதர், சின்னப்பா, மகாலிங்கம், எம் ஜி ஆர் என்ற நான்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் நடித்த ராஜகுமாரி தங்கப் பதுமை என்ற படத்தில் சிவாஜியுடன் நடித்து 5 சூப்பர் ஸ்டார் களுடன் நடித்த முதல் நடிகை என்ற பெருமை பெற்றார். பின்னர் இந்தப் பெருமையை பானுமதி பெற்றார்.

63இல் வானம்பாடி என்ற படத்தில் ராஜகுமாரி நடித்தார், அதுவே அவரது கடைசிப் படம். அதன் பின் படங்களில் அவர் நடிக்கவில்லை.டி நகர் வீட்டில் அமைதியாக வாழ்ந்தார். பிறகு தன் தியேட்டரை விற்றுவிட்டார். இப்போது அது ஒரு வணிக வளாகமாக இருக்கிறது.

திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த ராஜகுமாரி 20-9-1999 இல் தனது 77 வது வயதில் காலமானார்.தமிழக திரை உலகின் கனவுக் கன்னி மறைந்தாலும் மக்களின் மனதில் இன்னும் கனவுக் கன்னியாகவே வாழ்கிறார்.


Wednesday, March 18, 2015

மரண ஓலம்


அலைகடலின் ஆர்ப்பரித்து எழும் அலைகளின் ஓலத்தை கேட்டிருக்கிறோம். சுழன்றடிக்கும் சூறாவளியின் விர் விர் ரென்ற ஓலத்தை கேட்டிருக்கிறோம். மரங்களை வேருடன் பிடுங்கி எரியும் புயல் காற்றின் ஓலத்தைக் கேட்டிருக்கிறோம். வானத்தையும் பூமியையும் இணைக்கும் பெரு மழையின்  ஓலத்தைக் கேட்டிருக்கிறோம். மரணத்தின் ஓலத்தை யாராவது கேட்டதுண்டா?நான் கேட்டிருக்கின்றேன்.

நான் 50 வருடங்களுக்கு முன்பாக மரணத்தின் வாசலிலிருந்து மீண்ட நிகழ்வினை இங்கு சொல்ல விரும்புகின்றேன்.

அப்போது நான் திருச்சி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டை பஞ்சாயத்து யூனியனில் கடன் வழங்கும் துணை வட்டாசியாளராகப் பணி செய்து கொண்டிருந்தேன். எனது மைத்துனன் -என் மனைவியின் தம்பி- பிரான்சிஸ் வேலை தேடிக்கொண்டிருந்த சமயம். என் வீட்டிற்க்கு வந்திருந்தான். அவன் ஒரு சிறந்த பாட்மிண்டன் பிளேயர். எங்கள்  ஊரில் விளையாடி ஒரு மேஜை விளக்கை பரிசாக வாங்கி வந்திருந்தான்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. வீட்டில்தான் இருந்தேன். சாயந்திரம் 4 மணி இருக்கும்.  கீழே வைக்க வயர் போதவில்லை என்பதால்  அவன் கொண்டுவந்திருந்த மேஜை விளக்கை என் கைகளில் பிடித்துக் கொண்டிருந்தேன். அவன் சுவிட்சைப் போட்டான். அவ்வளவுதான். என் உடலில் மின்சாரம் பாய்ந்தது. உதறியும் விளக்கு கையிலிருந்து விழவில்லை.

அப்போது என் குரலிலிருந்து ஒரு ஓலம் கிளம்பியது. அது மரணத்தின் ஓலம் என்பதை உணர்ந்தேன். இதைப் பார்த்து என்னிடம் ஓடி வந்து என்னைத் தொட்டான் என் மைத்துனன். தொட்டவன் தூக்கி எறியப்பட்டான்.

அந்த காலத்தில் சுவிட்சின் அடியில் ஒரு பகுதி நீட்டிக்கொண்டிருக்கும்.அதை  அணைத்துவிட்டால் கரண்ட் சப்ளை நின்றுவிடும். நான் பேச முடியாத நிலையில் சுவிட்சை சுட்டிக்காட்டினேன். அவன் அதை உடனே புரிந்து கொண்டு அதை அணைத்து விட்டான். கையிலிருந்த விளக்கு கீழே விழுந்தது. நான் உயிர் பிழைத்தேன்.

அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் என் உடல் நடுங்குகின்றது. இப்போதும் 'நான் செத்துப் பிழைச்சவண்டா " என்ற எம் ஜி ஆர் பாடல் கேட்கும் போதெல்லாம் அந்த நிகழ்வு என் மனத்திரையில் காட்சியாக ஓடுகின்றது. நான் செத்துப் பிழைத்தவன்தான்.

நான் ஓலமிடும்போது தன் கையிலிருந்த குழந்தையை கீழே போட்டுவிட்டு 'ஏசுவே " என்று என் மனைவி குரல் கொடுத்தது என் காதுகளில் இன்னும் ஒலிக்கிறது. என்னை சாவின் கரங்களிடமிருந்து ஏசுவின் கரம் மீட்டதை உணர்ந்தேன்.

Saturday, March 14, 2015

பி யு சின்னப்பா


தனது இனிய பாடல்களினால் பாகவதர் புகழ்பெற்றது போல திரு பி யு சின்னப்பாவும் தன் வசனம் பேசும் திறமையினாலும் நடிப்பினாலும் பாகவதருக்கு சமமான இடத்தைப் பெற்றார். தமிழக திரையுலக ரசிகர்கள் பாகவதர், சின்னப்பா இருவருக்கும் தனித்தனியே ஏற்பட்டனர்.


ஜுபிடர் நிறுவனம் தயாரித்த சவுக்கடி சந்திரகாந்தா என்ற படத்தில் சுண்டூர்  இளவரசன் என்ற கதாபாத்திரமாக சின்னப்பா நடித்தார். படம் 1936இல்  வெளிவந்தது. நன்றாக ஓடியது. சின்னப்பாஉவுகு நடிகர் அந்தஸ்து கிடைத்தது. சின்னப்பாவின் தந்தை உலக நாகபிள்ளை நாடக நடிகர். திருவிழாக்களில் நாடகங்கள் நடத்துவதில் புகழ் பெற்றவர். அவரது நடிப்புத்திறன் சின்னப்பாவிடம் நிறைந்து இருந்தது.



சின்னப்பாவை விட எம் ஜி ஆர் ஒரு வயது இளையவர். சின்னப்பா கதாநாயகனாக நாடகத்தில் நடித்துகொண்டிருந்தபோது எம் ஜி ஆர் அதில் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது இன்றைய தலை,முறையினரால் நம்ப முடியாதது என்றாலும் அதுதான் உண்மை.



இதைத் தொடர்ந்து சின்னப்பா 1937,38,39 களில் ராஜமோகன், பஞ்சாப் கேசரி, அனாதைப் பெண், யயாதி, மாத்ரு பூமி, என்ற படங்களில் நடித்தார். படங்கள் சுமாராகவே ஓடின.



இதனால் மனம் வெறுத்து திரை உலகிலிருந்து விலகி ஆன்மீகத்தில் புகுந்தார். கோவில் கோவிலாக சென்றார். இவரது திரை வாழ்கையில் 1940 இல் அதிர்ஷ்ட சக்கரம் சுழல ஆரம்பித்தது. நடித்தத படங்கள் அனைத்துமே மாபெரும் வெற்றியைப் பெற்றன.



அலெக்சாண்டர் டூமாஸ் என்ற பிரபல நாவலாசிரியரின் தி மேன் இன் தி அயன் மாஸ்க்  என்ற நாவலைத் தழுவி உத்தம புத்திரன் என்ற திரைப்படத்தை மாடர்ன் தியேட்டர்ஸார் 1940 இல் வெளியிட்டனர். இதில் இரட்டை வேடங்களில் சின்னாப்பா நடித்தார்.  அதில் வில்லன் சின்னப்பா தனது தம்பியான நல்ல சின்னப்பாவிற்கு முகமூடியை தலையில் அணிவிப்பார். தாடி வளர வளர மூச்சு முட்டி உயிர் போய்விடும் என்று கூறி அட்டகாசமாக சிரிப்பார். சிரிப்பில் கூட அவரது நடிப்பு வெளிப்பட்டது. தியேட்டரே அதிரும்படியான கைத்தட்டலும் சீழ்க்கை ஒலியும் ரசிகர்களிடமிருந்து கிளம்பும். இந்தப் படத்தில்தான் "செந்தமிழ் நாடென்னும் போதினிலே" என்ற பாரதியாரின் பாடலை சின்னப்பா பாடுவார். அன்றைய பிரிட்டிஷ் அரசு பாடலுக்குத் தடை விதித்தது. பாடல் நீக்கப்பட்ட பின் தடையும் நீங்கியது.



இந்த இமாலய வெற்றிக்குப் பிறகு சின்னப்பா நடித்த படங்கள் எல்லாமே வெற்றிப்படங்களே. வெற்றிக்கன்னி  சின்னப்பாவின் நெற்றியில் வெற்றித் திலகமிட்டு அவரை புகழின் உச்சியைத் தொடச் செய்தாள்.



அடுத்து பட்கி  ராஜா பிலிம்சாரின் சூரிய மாலா சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அடுத்து வெளிவந்த கண்ணகி மாபெரும் வெற்றிப்படமாக மட்டுமல்ல இளங்கோவனின் கவிதை நட வசனத்தினால் சிகரத்தை தொட்டது. சின்னப்பாவும் கண்ணாம்பாவும் போட்டி போட்டு நடித்தனர். என் எஸ் கே, மதுரம் நகைச்சுவை காட்சிகள் மேலும் மெருகூட்டியது. கொலைக் களத்தில் கோவலன் பேசும் வசனங்கள்  காலத்தால் அழியாத நினைவுகள்.



இந்தப் படம் வெளிவந்த போது நான் என் எம் போர்டு ஹை ஸ்கூலில் 9வது படித்துக்கொண்டிருந்தேன். நானும் எனது நண்பன் ராஜையாவும் தியேட்டர் வாசலில் அமர்ந்து படத்தின் வசனங்களை நோட்டில் எழுதினோம். நீண்ட காலம் அந்த நோட்டை பத்திரமாக வைத்திருந்தேன். இன்று நினைத்தாலும் அந்த வசனங்கள் நினைவுக்கு வருகின்றன. இந்தப் படத்தில் சின்னப்பா பாடிய சந்திரோதயம் இதிலே காணுவது உன் செந்தாமரை முகமே என்ற பாடலும் மாதவியை பிரிய  காரணமாக இருந்த தேவமகள் இவள் யார்? என்ற பாடலும் என்றும் நினைவில் நிற்பவை.  இந்தப் படத்தின் மூலம் பாகவதருக்கு இணையான சூப்பர் ஸ்டாரானார் சின்னப்பா.



1944 இல் வெளிவந்த ஜகதலப்பிரதாபன்  சின்னப்பாவின் திரைவாழ்வின் பயணத்தில் மற்றும் ஒரு மைல் கல் எனலாம். கர்ண பரம்பரை ராஜா ராணி கதைதான். சின்னப்பா முழுத் திறமையையும் வெளிப்படுத்திய வெற்றிப் படம். சின்னப்பாவின் நண்பனாக என் எஸ் கே நடிப்பார். சின்னப்பாவின் ஜோடியாக எம் எஸ் சரோஜினி, யூ ஆர்  ஜீவரத்தினம், எஸ் வரலட்சுமி, டி ஒ ஜெயலட்சுமி நடித்தனர். படத்தை இயக்குனர் ஸ்ரீராமுலு விறுவிறுப்பாக இயக்கியிருந்தார். கத்திச்சண்டை, மல்யுத்தம் ஆகிய காட்சிகளில் சின்னப்பா தனது முழுத் திறமையையும் காட்டியிருப்பார். கிளைமாக்ஸ் காட்சியில் சின்னப்பா 5 வேடங்களில் மேடையில் கச்சேரி நடத்துவார். ஒரே காட்சியில் ஐந்து சின்னப்பாக்களைக் கண்ட ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து ஆரவாரம் செய்தனர். ஒரு வருடம் வரை ஓடிய சூப்பர் ஹிட் படம் இது.



இதன் பின் கே சுப்பிரமணியத்தின் இயக்கத்தில் விகடகவி ஏற்ன நகைச்சுவை சமூகப் படத்தில் நடித்தார். சின்னப்பா நடித்த ஒரே ஒரு சமூகப் படம் இதுதான். தன்னால் நகைச்சுவையாகவும் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தார். படம் சுமாராக ஓடியது. இந்தப் படத்தில் ஒரு புதுமை. எம் கே டி பாடிய பாடல் ஒன்று இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தது. இதன் பின் 1947 இல்  பங்கஜவல்லி என்ற படத்தில்  நடித்தார். சரியாக ஓடவில்லை. 1949 இல் வந்த மங்கையர்க்கரசி  ஒரு வெற்றிப்படம். தாத்தாவாக  தாடியுடன் மகனாக  மீசையுடன் பேரனாக  மீசை இல்லாமல் தோன்றுவார். ஒரு காட்சியில் இந்த மூன்று சின்னப்பாக்களும் தோன்றுவது அருமையாக இருக்கும்.



பாகவதரை வைத்து அசோக்குமார் என்ற படத்தை எடுத்த முருகன் டாக்கீஸார் சின்னப்பாவை வைத்து ரத்னகுமார் என்ற படத்தை 1949இல் எடுத்தனர். பானுமதி ஜோடியாக நடித்தார். மற்றும் எம் ஜி ஆர், என் எஸ் கே, மதுரம் நடித்தனர். கிருஷ்ணன் பஞ்சுவின் இயக்கம். இரு ஒரு மாயாஜாலக் கதை. சுமாராகவே ஓடியது.  "தவறான ஒரு சிறு சொல் கூட எனக்கு கோபத்தைக் கிளப்பிவிடும். நான் அசல் தமிழன். தன்மானம் மிக்கவன்" என்று சின்னப்பா இந்தப் படத்தில் அடிக்கடி  வசனம் பேசுவார். இவரது தோற்றம் கரடுமுரடாக இருந்தாலும்  பழகுவதற்கு இனியவர்.



நடிக மன்னன் என்ற பெயர் பெற்றவரும் வீரதீரச் செயல்களால் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவருமான பி யு சின்னப்பா புதுக்கோட்டையில் உள்ள  தந்து வீட்டில் திடீரென 23-9-51 இல் மரணமடைந்தார். அவரது வீட்டிலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டு கல்லறையும் எழுப்பப்பட்டது.



 புதுக்கோட்டையில் இவர் வீடுகளை வாங்கிக் குவித்தபோது இவர் வீடுகள் வாங்குவதை வாங்குவதை புதுக்கோட்டை சமஸ்தானம் தடை செய்தது. இதே போல பாகவதர் திருச்சியில் வீடுகள் வாங்குவதையும் அரசாங்கம் தடை செய்தது. எதிரும் புதிருமாக வலம் வந்த இரு துருவங்களான இருவருக்கும் ஒரே மாதிரி நிகழ்வுகள் நடந்தது விசித்திரமான ஒற்றுமை இல்லையா?


சின்னப்பா இறக்கும் முன் சுதர்சன் என்ற படத்தில் நடித்திருந்தார். கொடியாக கண்ணாம்பாவும் யோக மங்கலமும் நடித்தனர். பாகவதர் நடித்த ஹரிதாஸ் படத்தை எடுத்த ராயல் டாக்கீசார்தான் இதையும் எடுத்தனர். கதை வசனத்தை இளங்கோவனும்,எ எஸ் ஏ சாமியும் இணைந்து எழுதினார்கள். ஹரிதாஸ் படத்தை இயக்கிய சுந்தர் ராவ் நட்கர்நியும் சாமியும் இதை டைரக்ட் செய்தனர். சின்னப்பா இறந்த பிறகு வெளியிடப்பட்ட இப்படம் சுமாராகத்தான் ஓடியது. 

பிருதிவிராஜன் என்ற படத்தில் தன்னுடன்  சம்யுக்தையாக நடித்த நடிகை சகுந்தலாவை காதலித்து மணந்துகொண்டார் சின்னப்பா. திருமணத்திற்குப் பின் சகுந்தலா நடிப்பதை விட்டுவிட்டார். இவர்களுக்கு ஒரே ஒரு மகன் ராஜா பகதூர்.

சினிமாவில் பேரும் புகழும் பெற்றவர்களின்  கடைசி காலம் வறுமையில்தான் முடிந்திருக்கிறது. இந்த சாபக் கேட்டிற்கு சகுந்தலாவின் குடும்பமும் விதிவிலக்காகி விட முடியுமா?

இத்துடன் தமிழக திரை உலகின் சமகாலத்தில் வாழ்ந்த பாகவதர், சின்னப்பா  என்ற இரண்டு சூப்பர் ஸ்டார்களின் வாழ்க்கை நிகழ்வுகள் முடிவு பெறுகின்றன. இந்த தகவல்கள் எல்லாம் பல பத்திரிகைகள், செய்திகளில் இருந்தும், என் நினைவிலிருந்தும் தொகுக்கப்பட்டுள்ளன. 

Monday, March 2, 2015

முதல் சூப்பர் ஸ்டார்.

எம் கே தியாகராஜ பாகவதர்.

தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார். தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர். தனது இனிமையான பாடல்களினால் தனது வசீகரமான அழகினாலும் ஈர்க்கப்பட்டு மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பவர்.

இவர் நடித்த முதல் படம் பவளக்கொடி 1934இல் வெளிவந்தது. 55 பாடல்களைக் கொண்ட இப்படம் சூப்பர் ஹிட் ஆனது. கே சுப்பிரமணியம் இயக்கினார்.பிரபல நாட்டிய மேதை பத்மா சுப்பிரமணியம் இவரது மகள்.

இதைத் தொடர்ந்து 10 ஆண்டுகளில் 9 வெற்றிப் படங்களில் நடித்து சாதனை படைத்தார் பாகவதர். இவர் கன்னடத்து பிரபல பாடகி அஸ்வத்தம்மாவுடன் நடித்த சிந்தாமணி படம் 1937இல் வெளிவந்து வசூலைக் குவித்தது. அந்தப் பணத்தில் கட்டப்பட்டதுதான் மதுரை சிந்தாமணி டாக்கீஸ். இதை இயக்கியவர் பிரபல இயக்குனர் y v ராவ். இவர் நடிகை லட்சுமியின் தந்தை என்பது உபரித் தகவல்.

1937இல் எம் ஆர் சந்தான லட்சுமியுடன் நடித்த அம்பிகாபதி படத்தின் மூலம் வசனகர்த்தாவாக இளங்கோவன் முதன் முதலாக அறிமுகமானார். படத்தை இயக்கிவர் எல்லிஸ் ஆர் டங்கன் என்ற அமெரிக்கர். ஆங்கிலப் படமான ரோமியோ ஜூலியட் டுக்கு இணையாக எடுக்கப்பட்ட தமிழ் காவியம். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

1937இல் வெளிவந்த திருநீலகண்டர்  பாடல்களுக்காகவே ஓடிய படம். இவர் பாடிய 'தீன கருணாகரனே நடராஜா' 'மறைவாய் புதைத்த ஓடு ' என்ற பாடல்கள் சூப்பர் ஹிட் ஆயின. 

அதே வருடம் வெளியான அசோக் குமார் படத்தில்தான் சித்தூர் வி நாகையா, பி கண்ணாம்பா தெலுங்கிலிருந்து முதன் முதலாக தமிழுக்கு அறிமுகமானார்கள்.  இதில்  பாகவதர் பாடிய  'உன்னைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ', 'சத்வகுனபோதன்', தியானமே எனது மனது நிறைந்தது' என்ற பாடல்கள் தமிழமெங்கும் பாடப்பட்டவை. இந்தப் படத்தில் எம் ஜி ஆர் பாகவதரின் நண்பனாக நடித்திருப்பார் என்பது ஒரு ஆச்சர்யமான தகவல்.

பட்சி ராஜா பிலிம்ஸின் ' சிவகவி' இதே ஆண்டு வெளிவந்தது. திரைக்கதை வசனம் இளங்கோவன். தமிழக திரை உலகின் கனவுக்கன்னி டி ஆர் ராஜ குமாரி முதன் முதலாக பாகவதருடன் நடித்தார் நாட்டியக்காரியாக.தமிழக மக்கள் 20,30 முறை பார்த்த இசைக் காவியம் இந்தப் படம்.

1944 தீபாவளியன்று வெளியான படம் ' ஹரிதாஸ்'. பிரபல பாடகி என் சி வசந்த கோகிலம் கதாநாயகியாகவும் டி ஆர் ராஜகுமாரி தாசியாகவும் நடித்த படம்.  பாகவதரின் 9வது தொடர் வெற்றிப் படம். பாடல்கள் பாபநாசம் சிவன். இசை ஜி ராமநாதன்.இயக்கம் சுந்தர் ராவ் நட்கர்னி. மூன்று தீபாவளிகளாக தொடர்ந்து  ஓடி வசூலை குவித்த படம்.

     இன்னும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்தபோது லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதருக்கும் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. தமிழகமே கண்ணீர் கடலில் மிதந்தது. பிரபல வழக்கறிஞர் திரு.எத்திராஜ் மூலமாக லண்டன் பிரிவு கவுன்சிலுக்கு அப்பீல் செய்யப்பட்டு 25-4-47 இல் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். பாகவதர், கலைவாணர் இருவரும் சிறையில் இருந்த காலம் 2 வருடம் 2 மாதம் 13 நாட்கள்.

சிறையிலிருந்து திரும்பி வந்ததும் 1948இல் ராஜமுத்திரை என்ற படத்தை சொந்தமாக தயாரித்தார்.பிரபல பாடகி எம் எல் வசந்தகுமாரி பாடல்களைப் பாடி இருந்தார். கதாநாயகி திருமதி வி என் ஜானகி, எம் ஜி ஆரின் துணைவியார். கதை வசனத்தை பிரபல சிறுகதை ஆசிரியர் இக்கால சிறுகதை எழுத்தாளர்களின் முன்னோடியான புதுமைப்பித்தன் எழுதினார். முடியும் தருவாயில் அவர் திடீரென்று மரணம் அடைந்ததால் மீதி வசனங்களை  நாஞ்சில் ராஜப்பா எழுதி முடித்தார். படம் வெளிவரும் முன்னே இசைத்தட்டுக்கள் வெளியிடப்பட்டு விற்பனையில் சாதனை படைத்தன. இசை சி ஆர் சுப்புராமன். பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆயின. இதில் எம் ஜி ஆர் எம் ஜி சக்ரபாணி நடித்திருந்தனர். இந்தப்  படத்தில்தான் திருமதி பானுமதி தெலுங்கிலிருந்து தமிழ் திரைப் பட உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனாலும் படம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.10 வாரங்களே ஓடியது.பாகவதர் மனம் தளர்ந்தார். பாகவதரின் திரை உலகின் முதல் தோல்வி இதுவே.

இருந்தாலும் தனது 11வது படமான அமரகவியை தயாரித்தார். டி ஆர் ராஜகுமாரி, பி எஸ் சரோஜா ஜோடியாக நடித்தனர். இசை ஜி ராமநாதன். வசனம் பாடல்கள் கவிஞர் சுரதா. இதில்தான் அவர் அறிமுகமானார்.

பாகவதரின் 12வது படம் சியாமளா. தெலுங்கில் எஸ் வரலட்சுமி கதாநாயகியாக நடித்த படத்திலோ கதாநாயகனை நீக்கிவிட்டு பாகவதரை நடிக்கச் செய்து தமிழில் தயாரித்தனர். இதில் பாகவதர் பாடிய ' ராஜான் மகாராஜன்' என்ற பாடல் பிரபலமாகியது. பாகவதர் மீசையுடன் நடித்த ஒரே ஒரு படம் இதுவே. படம் ஓடவில்லை.

பாகவதரின் 13வது படம் 'புதுவாழ்வு'. இதை இயக்கம் பொறுப்பை பாகவதரே ஏற்றார். லலிதா இதில் ஜோடியாக நடித்தார். மாதுரி தேவி, டி எஸ் பாலையா, என் எஸ் கே , மதுரம் இதில் நடித்தனர். படம் சுமாராகவே ஓடியது.

பாகவதரின் கடைசிப் படம் சிவகாமி.இதில் ஜி வரலட்சுமி ஜோடியாக நடித்தார். தெலுங்கில் பிரபல நடிகர் ஜக்கையா, நடிகை ஜெயசித்ராவின் தாயார் ஜெயஸ்ரீ இளம் ஜோடியாக நடித்தனர்.படம் சுமாராக ஓடியது.

பாகவதர் என்ற  தமிழக திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தொடர்ந்து 9 வெற்றிப் படங்களை தந்து தனது இனிய இசையால் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்று விட்ட ஏழிசை மன்னர். மன்னர் போலவே அரண்மனை கட்டி வாழ்ந்தவர். மறைந்து விட்டாலும் மக்கள் அவரை அவரது நினைவுகளை மறந்துவிடவில்லை. அவர் வசித்த திருச்சியில் உள்ள வீட்டில் தற்போது மாவட்ட போக்குவரத்து அலுவலகம் செயல்பல்டுகிறது. பாகவதர் பங்களா ஸ்டாப்  என்றே அது இன்றும் அழைக்கப்படுகிறது. பெயரே பாகவதர் பங்களா. திருச்சியில் பாகவதர் காலனி ஒன்றும் இருக்கிறது. சிறையிலிருந்து திரும்பிய பிறகும் இவர் நம்பிக்கையை இழக்கவில்லை. சாம்பலில் இருந்து மீண்டுஎழும் பீனிக்ஸ் பறவையைப் போல தோல்விகளை எல்லாம் மிதித்து வெற்றி நடை போட்டார். இவரைப் பற்றிய இன்னொரு செய்தி கூட கூறப்படுகிறது. அதாவது இவர் சாப்பிடும்போது சூடான சாதத்தில் தங்க ரேக்குகளை வைத்துவிடுவாராம். அவை அந்த சூட்டில் கரைந்து உணவுடன் கலந்து விடுமாம். அதை அப்படியே சாப்பிடுவாராம். அதனால்தான் அவரது மேனி பொன்னிறத்தில் இருந்ததாம். இது கற்பனையாகக் கூட இருக்கலாம். அல்லது இவரது வசீகரத்திற்கு அதிலும் பெண்களை கவர்ந்திழுக்கும் அழகுக்கு காராணமாகவும் இருக்கலாம் இல்லையா?


Friday, January 16, 2015

பாடல்கள் வழியே ஒரு பயணம் 1



       

பாதச்சுவடுகள் வழியே உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

பாதச்சுவடுகள்:  இது ஆண்டவரின் பாதச்சுவடுகள். எப்போதோ படித்த ஒரு நிகழ்வின் நிழலாட்டம் என் கண்களில் விரிகின்றது.

பக்தன் ஒருவன் இறைவனின் கரம் பிடித்து நடந்து கொண்டிருந்தானாம். சேரும் சகதியும் உள்ள ஒரு இடத்தின் அருகில் வந்ததும் சற்று நின்றானாம். கண்மூடித் திறப்பதற்குள் தான் அக்கரையில் நிற்பதை அறிந்தானாம். திரும்பிப் பார்த்து ஒருவரது கால் தடம் மட்டுமே இருப்பதைக் கண்டு "ஆண்டவரே என்னை சேற்றில் நடக்க வைத்து விட்டீரே?" என்று கேட்டானாம்.  பதிலாக கடவுளின் குரல்," அந்த ஒற்றைக் கால் தடம் என்னுடையது. சேற்றில் உன்னை நான்தான் தூக்கிச் சுமந்தேன்" என்று ஒலித்ததாம்.

இந்த நிகழ்வு கற்பனையாகக் கூட இருக்கலாம். இதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒன்று இருக்கின்றது. நமது துன்ப துயரங்களில் ஆண்டவர் நம்மை பாதுகாக்கிறார் என்பதே அந்தப் பாடம். நம்பினோர் கெடுவதில்லை என்பது திருமறையின் தீர்ப்பல்லவா?

ஒரு சிறிய கவிதை வரிகளுடன் ஆன்மீகத்துக்கு விடை கொடுப்போம்.

1."உன் பாதச்சுவடுகளில் என் பாதம் பதித்து  உன் கரம் பிடித்து நான் நடந்திட வேண்டும்."

2." உன் திருப்பாத நிழலில் நான் அமர்ந்து இளைப்பாற வேண்டும்".

நெஞ்சில் நிறைந்த நினைவுகள்.

ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்பு  மதுரையில் "ரத்தன்" என்ற ஹிந்தித் திரைப்படத்தைப் பார்த்தேன். இனிமையான பாடல்களுக்காவே ஓடிய படம் அது. தன்னை விட்டுச் செல்லும் காதலனை வழி மறித்து காதலி பாடும் பாடலின் சில வரிகள் இன்னும் என் நெஞ்சில் நிற்கின்றன.

          "அக்கியா மிலாக்கே
           ஆபெரு மாக்கே
           சலோ நஹி ஜானா "

இந்தப் படத்தில் காதலனாக கரண்  திவான்  என்ற வசீகர நடிகரும் காதலியாக சுவர்ணலதா என்ற இனிய குரல் படைத்த பாடகியும் நடித்திருந்தனர். படத்தின் கதை பாட்டுப் புத்தகத்தில் இப்படி எழுதப்பட்டிருக்கும்.  "விளக்கும்  விட்டில் பூச்சியும். விளக்கில் விழுந்தால் செத்து விடுவோம் என்பதை அறிந்தும் விளக்கில் விழுந்து எரிந்து போவது போல, காதலென்னும் நெருப்பில் தங்களை எரித்துக் கொண்ட காதலர்களின் கதை".

ரத்தன் படத்தின் பாடல்கள் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றதைப் போல இனிய இசையுள்ள படங்கள் இன்று வரை வரவில்லை. வேண்டுமானால் எஸ் டி பர்மனின்  இசையில் வந்த ஆராதனா என்ற ஹிந்தி படத்தின் பாடல்களை ஒப்பிடலாம்.

மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற தமிழ் படப் பாடல்கள் பற்றி சிறிது விமர்சிக்கலாமே?

ஏழிசை மன்னர் எம் கே தியாக ராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் என்ற படத்தின் மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற பாடலைக் கேட்காத பாடாத தமிழர்களே இருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. இதே போல மீரா என்ற படத்தில் எம் எஸ் சுப்புலட்சுமி பாடிய காற்றினிலே வரும் கீதம் என்ற பாடலையும் கேட்காத, பாடாத தமிழர்களே இருக்க முடியாது என்பதும் உண்மையே. இப்பாடலை எழுதியவர் கல்கி என்பது குறிப்பிடத்தக்கது.

கொஞ்சம் பக்தி  ரசத்தையும் சுவைத்திடலாமே?

பக்தியில்தான் எத்தனை வகை? இறைவன் மீது மனிதன் வைத்திருக்கும் இறைபக்தி, குருவின் மேல் மாணவன் வைக்கும் குரு  பக்தி, கணவன் மீது மனைவி கொண்டுள்ள பதி பக்தி, பெற்ற தாய் மீது மகன் வைத்திருக்கும் தாய் பக்தி.

குரு பக்தி ஏகலைவனின் கட்டை விரலை துண்டாடியது. இறைவன் மீது கொண்டுள்ள பக்தியினால் சூடிகொடுத்த நாச்சியார் எனும் பேறு பெற்றாள் அர்ச்சகரின் மகளான ஆண்டாள்.

இப்போது நாம் பார்க்கப்போவது ஒரு மீனவப் பெண்ணின் பக்தி. அவள் பாடிய பாடல் வரிகள் கவிதையாகிறது.

1. சொன்ன சொல்லும் நினைவில்லையா?
மீண்டும் வருவேன் என்று என்னிடம் சொன்ன சொல்லும் நினைவில்லையா?

2. வான் தூதரின் கீதத்தில் மயங்கி மறந்தீரோ?
மீன் வலையை தைக்கும் தையல்தானே என்ற நினைவா?
மனிதரைப் பிடிக்க மீனவரைத்தானே நீர் பிடித்தீர்?
புனிதனே என் மணாளனே என்று நீர் வருவீர்?

3. கதிர் விழுங்கிய மதி உமிழும் கடலும் கொதித்து எழுகின்றதே?
மீனவப் பெண்ணுக்கு இல்லையோ உமையடையும் உரிமை?
தேனவளே என்று அழைத்தாலே அதுவே என் பெருமை.

இத்துடன் இன்றைய நிகழ்வுகளை முடிப்போம். மீண்டும் சந்தித்து நிறைய பேசுவோம்.

அன்புடன்

இரா. விக்டர்.